நகரங்களில் உள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் சந்தித்த அழைப்பு முறிவு பிரச்னை பெருமளவில் குறைந்து விட்டது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் டோத்ரி கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம், அகோலா நகரில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சஞ்சய் டோத்ரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
நகரங்களில் வசிக்கும் மக்கள், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் எதிர்கொண்டுவந்த அழைப்பு முறிவு பிரச்னைகள் பெருமளவில் குறைந்து விட்டன. இருப்பினும் புறநகர்ப்பகுதிகளில் இன்னும் இந்தப் பிரச்னை நீடிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தரமான தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூடுதலாக செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க வேண்டும். மேலும், இணையதளச் சேவை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பூமிக்கடியில் கம்பி வடங்களை பதிக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது என்றார் அவர்.