அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க இந்திய அமைப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களிடையே அவர் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நகரங்களிலும் பிரதமர் உரையாற்றவிருக்கும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்றாலும், ஹூஸ்டனில் செப்டம்பர் 22-ஆம் தேதி அவர் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அமெரிக்க இந்திய அமைப்பினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2014-ஆம் ஆண்டில் நியூயார்க் நகரிலும், 2016-ஆம் ஆண்டில் சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் பிரதமர் மோடி ஆற்றிய உரை இந்திய அமெரிக்கர்களிடையே மிகப் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது நினைவுகூரத்தக்கது.