பெண்கள் மற்றும் சிறார் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கூறினார்.
தனது தொகுதியான செகந்திராபாத் மக்களவைத் தொகுதிக்கு சனிக்கிழமை வருகை தந்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பெண்கள் மற்றும் சிறார் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு பல்வேறு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தும்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாது. இனி வரும் நாள்களில் பயங்கரவாதத்தை வேரறுப்பதிலும், பயங்கரவாதம் பரவுவதைத் தடுப்பதிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் சிறப்பாக செயல்படும் என்றார் அவர்.