நீதித்துறை, சட்டப்பேரவை மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்று தூண்களின் அதிகாரங்கள் மற்றும் அவற்றின் வரம்புகள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி. அசோக் பாஜ்பாய் பேசுகையில், அரசியலமைப்பில் கொலீஜியம்' என்ற அமைப்பின் மூலமாகவே நீதிபதிகளின் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்ற வார்த்தை குறிப்பிடவில்லை. இருப்பினும் தற்போது கொலீஜியம் பரிந்துரையின்பேரிலேயே உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தகுதி அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படவில்லை என்று அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூட அண்மையில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தகுதிவாய்ந்த நபர்கள் நீதித்துறையின் உயர் பதவிக்கு வருவதை உறுதி செய்ய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் அகில இந்தியத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பாஜ்பாய் பேசினார்.
பாஜ்பாயின் இந்த யோசனைக்கு கட்சி வேறுபாடின்றி பல்வேறு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதிலளித்து பேசுகையில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒரே கருத்தை கொண்டுள்ளனர். எனவே, நீதித்துறை, சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் பிரச்னை, அவற்றின் அதிகாரங்கள், வரம்புகள் குறித்து நாங்களும் (மாநிலங்களவை உறுப்பினர்களும்) விவாதிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, மீண்டும் ஒரு நாள் விவாதிக்கப்பட வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.