மக்களின் சௌகரியத்துக்காக நான் உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தரும்போது எனக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை அளித்தாலே போதும் என்று அம்மாநில முதல்வருக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச முதல்வருக்கு நேற்று (புதன்கிழமை) கடிதம் எழுதியுள்ளார். அதில்,
"உத்தரப் பிரதேச பயணத்தின்போது காவல் துறையினர் எனக்கு அளித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பாராட்டுகிறேன். ஆனால், அது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது எனக்கு வருத்தமளிக்கிறது.
நான் மக்களுக்கு சேவையாற்றுபவர் என்பதால், அவர்கள் என்னால் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளக் கூடாது. பாதுகாப்பு வாகனத் தொடரணியில் (கான்வாய்) 22 வாகனங்கள் இருந்தன. தில்லி மற்றும் மற்ற மாநிலங்களில் பெரிய பிரச்னை கிடையாது. என்னுடன் ஒரே ஒரு பாதுகாப்பு வாகனம் தான் உடன் வரும். அதனால், நான் உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தரும்போது குறைந்தபட்ச பாதுகாப்பை அளித்தாலே போதுமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ரேபரலி தொகுதிக்கு வருகை தந்த போது அவர்களுடைய கான்வாயில் 22 வாகனங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.