கொச்சி: கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக, மாநிலத்தில் உள்ள 4 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் பெய்து வரும் மழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் கன்னூர், பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் மாயமாகியுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிக மிக அதிகக் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குட்டி, கீழ் பெரியார், பூடதன்கேட்டு, மலங்கரா ஆகிய அணைகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால், அணையின் பாதுகாப்புக் கருதி மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து பத்தனம்திட்டா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.