நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த ஜூன் 17-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி இந்த கூட்டத்தொடர் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கூட்டத்தொடரைஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகையில், " இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதனால், கூட்டத்தொடரை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளிடமும் மத்திய அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். சிலர் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், நிச்சயம் கூட்டத்தொடரை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன' என்றன.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு கூட்டத்தொடர் மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களவையில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை நேரம் முடிவடைந்தும், மசோதாவை நிறைவேற்றுவதற்காக இரு அவைகளும் நள்ளிரவு வரை சில சமயங்களில் செயல்பட்டன. மக்களவையில் 128 சதவீதம் அதிகமாக அலுவல்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல் மாநிலங்களவையின் அலுவல்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.