ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தொடர்ந்து 11-ஆவது ஆண்டாக ரூ.15 கோடியை ஆண்டு ஊதியமாகப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்ற அவரது கொள்கைக்காகவும், அவர் தாமாக முன்வந்து கேட்டுக்கொண்ட காரணத்தினாலும், அவரது சம்பளம் உயர்த்தப்படாமல் அதே நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19 நிதியாண்டில் அம்பானியின் அடிப்படை சம்பளம் மற்றும் இதர படிகள் ரூ.4.45 கோடியாகும். நிறுவன லாபத்தில் அவருக்கான பங்கு ரூ.9.53 கோடியாகும். அவரது பதவிக்கான கூடுதல் படிகள் ரூ.31 லட்சமும், ஓய்வூதியப் பலன்கள் ரூ.71 லட்சமும் வழங்கப்பட்டன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக நிர்ணயிக்குமாறு கடந்த 2009-ஆம் ஆண்டு முகேஷ் அம்பானி கேட்டுக்கொண்டார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் இதர இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சம்பளம் மற்றும் இதர படிகள் உயர்த்தப்பட்ட போதும், தன்னுடைய சம்பளத்தை உயர்த்த வேண்டாம் என முகேஷ் அம்பானி கேட்டுக்கொண்டார்.
முகேஷ் அம்பானிக்கு ரூ.24 கோடிக்கு அதிகமாக சம்பளம் வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தபோதிலும், அதை அவர் ஏற்கவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக அவரது சம்பளம் ரூ.15 கோடியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.