உத்தரபிரதேச (உ.பி.) மாநில கலால் துறையில் கடந்த 2008-2018-ஆம் ஆண்டுகளுக்கிடையே ரூ.24,805 கோடி மதிப்பிலான பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்த சிஏஜி-யின் அறிக்கை உத்தரபிரதேச சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநில கலால் துறையின் பல்வேறு முறைகேடு நடவடிக்கைகளால் ரூ.24,805 கோடி மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2009-2010-ஆம் ஆண்டின் கலால் கொள்கையின்படி, அண்டை மாநிலங்களிலிருந்து மது வகைகள் கடத்தி வரப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் சீரற்றமுறையில் சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இருப்பினும், இந்த மண்டலங்கள் ஒன்பது ஆண்டுகளில் எவ்வித விரும்பத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.
மேலும் கடந்த 2009-2018 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் எந்தவித வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகளையும் கோராமல் சில்லறை மதுபான விற்பனை கடைகளுக்கான உரிமங்கள் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளன. இது, நியாயமான விலையில் மதுபானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்பை அறவே நீக்கிவிட்டது என அந்த அறிக்கையில் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.