சந்தையில் விற்பனை செய்யப்படும் 26 மருந்துகளை தரமற்றவை என்று, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தில் திருவள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்து தரமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 843 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 817 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், வயிற்றுப் போக்கு, இருமல், கிருமித் தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என்று அதன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், நுரையீரலுக்கு சுவாசக் காற்றை அனுப்பும் கருவிகள், எக்ஸ்-ரே கருவி, புற்றுநோய் சிகிச்சைக்கான பிஇடி கருவி, இதயத் துடிப்பை மீட்டெடுக்கும் மின்னழுத்தக் கருவி, டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்டவை மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வரையறை செய்தது நினைவுகூரத்தக்கது.