காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: இம்ரானிடம் டிரம்ப் உறுதி

காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
வாஷிங்டனில் டிரம்ப்பை சந்தித்த இம்ரான்.
வாஷிங்டனில் டிரம்ப்பை சந்தித்த இம்ரான்.


காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் மோடி விடுக்கவில்லை என்று தெளிபடுத்தியுள்ளது. காஷ்மீர் பிரச்னை இந்தியா-பாகிஸ்தான் இடையிலானது. இதில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு இடமில்லை என்பது இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.
அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்பை வாஷிங்டனில் உள்ள அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்தார். காஷ்மீர் பிரச்னை குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நான் உதவ முடியும் என்றால், மத்தியஸ்தராக செயல்படவே விரும்புவேன் என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த கருத்தை இம்ரான் கான் வரவேற்றார். மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டால் பல லட்சம் மக்களின்  வேண்டுகோள் நிறைவேறும் என்று அவர் கூறியுள்ளார். 
இது தவிர, காஷ்மீர் விஷயத்தில் மத்திஸ்தராக செயல்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் (ஜி 20 உச்சி மாநாட்டில்) என்னை சந்தித்த போது கேட்டுக் கொண்டார் என்றும் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை. காஷ்மீர் பிரச்னை இந்தியா-பாகிஸ்தான் இடையிலானது. இதில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு அவசியமில்லை. முதலில் காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதையும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதையும் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள சிம்லா ஒப்பந்தம், லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றை பாகிஸ்தான் முழுமையாகக் கடைப்பிடித்தால் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com