சமையல் செய்யும் வேலையை எளிதாக்க மிக்ஸி, கிரைண்டர் வந்ததெல்லாம் போதாது என்று விஜயவாடாவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விருக்கின்றனர்.
பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும், வேலைக்குப் போகும் பெண்களின் வேலையை எளிதாக்கும் வகையிலும், அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில் கிருஷ்ணா மாவட்ட அரசு அதிகாரிகள் யோசித்த போது உதித்ததே இந்த திட்டம்.
அதன்படி முதற்கட்டமாக ரைத்து காய்கறி சந்தையில், காய்கறிகளை மட்டும் விற்பனை செய்யாமல், சமையல் செய்யத் தேவையான வகையில் நறுக்கிய காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, காய்கறி சந்தையில் இதற்காக இரண்டு கடைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொன்றிலும் தலா ஆறு பெண்கள் பணியாற்றுவார்கள். இங்கு காய்கறிகளும் விற்கப்படும். இங்கு காய்கறி வாங்கி அதை சமையலுக்குத் தேவையான வகையில் நறுக்கிப் பெற்றுக் கொள்ளலாம். அதில்லாமல் வேறு கடைகளில் வாங்கிய காய்கறிகளையும் இங்கே நறுக்கிக் கொள்ளலாம்.
இது மட்டுமா? பெண்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம், காய்கறி மற்றும் அது எந்த வடிவத்தில் வெட்டப்பட வேண்டும் என்பது குறித்து ஆர்டர் கொடுத்துவிட்டால், காய்கறி விலையை விட கூடுதலாக நறுக்குவதற்கு என்று ஒரு கிலோவுக்கு ரூ.10 கட்டணத்துடன் நறுக்கியக் காய்கறிகளை வீட்டுக்கேக் கொண்டு வந்து கொடுக்கும் திட்டமும் இதனுள் அடங்கும்.
இந்த திட்டம் ஏற்கனவே விசாகப்பட்டினத்தின் பல்வேறு காய்கறி சந்தைகளிலும் வழக்கத்தில் இருக்கும் ஒரு திட்டம்தான். முதல் முறையாக விஜயவாடாவில் இதனை அமல்படுத்த முடிவெடுத்துள்ளோம். விரைவில் இது தொடங்க உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.
அசைவ உணவுகளான மீன், கறி போன்றவற்றை நறுக்கிப் பெற்றுக் கொள்வது போல இனி காய்கறிகளையும் நறுக்கிப் பெற்றுக் கொள்ளலாம் என்பது நிச்சயம் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கலாம்.