சிலர் தங்களின் வாழ்வாதாரத்துக்காக அப்படி தான் பேசுவார்கள் என்று ஓவைஸி விமர்சனத்துக்கு மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலடி அளித்தார்.
நரேந்திர மோடியால் கோயில்களுக்குச் செல்ல முடிகிறது என்றால், நம்மாலும் மசூதிகளுக்கு செல்ல முடியும். மோடியால் குகையில் அமர முடிகிறது என்றால், நம்மாலும் மசூதிகளில் வழிபாடு நடத்த முடியும். இந்திய ஜனநாயகத்தில் 300 எம்.பி.க்களால் முஸ்லிம்களின் உரிமையை பாஜக-வால் பறிக்க முடியாது. அனைவரும் தங்களின் மதச் சடங்குகளைப் பின்பற்ற இந்திய அரசியலமைப்புச்சட்டம் அனுமதி வழங்கியுள்ளது என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
சிலர் தங்களின் வாழ்வாதாரத்துக்காக ஜாதி, மதம், சமயம் தொடர்பாக தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி தான் பேசுவார்கள். இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்நாட்டு மக்கள் 130 கோடி பேரின் பேராதரவைப் பெற்றவர் பிரதமர் நரேந்திர மோடி. அவரது தலைமையில் பாதுகாப்பாக இருப்பதாக அனைவரும் கருதுகின்றனர்.
எனவே ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் 130 கோடி இந்தியர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பயங்கரவாதம், ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.