உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரின் தப்பல் நகரைச் சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியைப் பற்றிய சில தகவல்கள் தெரிய வந்துள்ளது.
கொலை வழக்கில் கைதான இரண்டு பேரில் ஒருவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கடந்த 2014ம் ஆண்டு தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் துன்புறுத்தல், பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்காக தாக்குதல், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அலிகரில் சிறுமி கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. குழந்தையின் தந்தை கடனாக பெற்ற ரூ. 10,000 தொகையை திருப்பிச் செலுத்தாததால், அந்த குழந்தையை கொலை செய்து விட்டதாக, அந்த இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில், அலிகரில் உள்ள குப்பைத் தொட்டியில் கடந்த 2-ஆம் தேதி அந்தக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதையடுத்து அதை உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். குழந்தை இறந்து 72 மணி நேரம் ஆனது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை இறந்துள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சூழலில் அதுகுறித்து உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.
பணியிடை நீக்கம்..: இந்த விவகாரத்தில் தாமதமாகவும், கவனக்குறைவுடனும் செயல்பட்ட காரணத்துக்காக தப்பல் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அந்நிலையத்தின் காவலர்கள் 5 பேர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்..: இந்நிலையில், இரண்டரை வயது பெண் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தங்கையும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா, பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "அலிகரில் சிறிய குழந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
இந்த சம்பவம் என்னை மிகவும் துன்புறுத்துகிறது. இதற்கு பின்னணியில் உள்ள குற்றவாளிகள் தப்பித்து விடக் கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
மாயாவதி கூறுகையில், " இந்த சம்பவம், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. குழந்தையை கொலை செய்த குற்றவாளிகளை தப்பிக்க விடாது, உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.
நடிகர்கள் கண்டனம்..: இந்த சம்பவத்துக்கு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.