ஜெய்ப்பூர்: நலின் கந்தேல்வால், ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். இவர் 2019ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர்.
இவர் மொத்தமுள்ள 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இவரைத் தவிர இதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 3 மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.
இது குறித்து நலின் கூறுகையில்,ஜெய்ப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக நான் முழுக்க முழுக்க படிப்பு ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது பெற்றோர் மருத்துவர்கள். எனது சகோதரரும் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அவர்களது முழு ஒத்துழைப்புடன், ஆசிரியர்களின் உதவியோடு நான் இந்த சாதனையை செய்ய முடிந்தது.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் படிப்பேன். வாட்ஸ்-அப், பேஸ்புக் எல்லாவற்றில் இருந்தும் 2 ஆண்டுகளாக விலகி விட்டேன். ஸ்மார்ட்போனும் கிடையாது. இதுதான் சாதனைக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது என்கிறார் அவர்.
நலின் கூறும் இந்த ரகசியம், நீட் தேர்வுக்காக மட்டுமல்ல, எந்த தேர்வாக இருந்தாலும் மாணவர்களுக்கான முக்கிய விஷயமாக அமைந்துள்ளது.