புது தில்லி: கதுவா சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சஞ்சி ராம் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், சஞ்சி ராம், ஆனந்த் தத்தா, பர்வேஷ் குமார், தீபக் கஜூரியா, சுரேந்தர் வெர்மா, திலக் ராஜ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சஞ்சி ராம், சிறப்பு காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா, சுரீந்தர் சிங், பர்வேஷ் குமார் ஆகியோர் மீது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 302 (கொலை), 376டி (கூட்டு பாலியல் வன்கொடுமை)ன் படி குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரீந்தர் வெர்மா ஆகியோர் மீது 201 (தடயங்களை அழித்தல்) என்ற பிரிவின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த போது உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் கல்லூரியில் தேர்வெழுதியது தொடர்பான ஆவணங்களை ஆதாரமாக அளித்ததை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக அளித்து, குற்றம்சாட்டப்பட்ட விஷாலை விடுதலை செய்வதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார் என்று அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த 17 மாதங்களுக்குப் பிறகு கதுவா சிறுமி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இவர்களுக்கான தண்டனை குறித்த விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.