5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: முக்தார் அப்பாஸ் நக்வி

அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட இருப்பதாக மத்திய சிறுபான்மையினர்
தில்லியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் 112-ஆவது நிர்வாகக் குழுக் கூட்டம்.
தில்லியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் 112-ஆவது நிர்வாகக் குழுக் கூட்டம்.


அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.


தில்லியில் மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் 112ஆவது நிர்வாகக் குழுக் கூட்டம், 65ஆவது பொது குழுக் கூட்டம் ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இக்கூட்டத்துக்கு நக்வி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
நாட்டில் திருப்திப்படுத்துதல் கொள்கை, மதவாதம் எனும் நோய் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு கட்டிவிட்டது. மத்திய அரசு நீதி, நம்பகத்தன்மை, அதிகாரம் ஆகியவற்றுடன் செயல்படுவதை நிரூபித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்திய சிறுபான்மையினர் மாணவர்களுக்கு, புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக மீண்டும் கல்வி போதிக்கப்படும். மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள மதரசாக்களில் ஹிந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி பாடங்கள் கற்றுக் கொடுக்க முக்கிய கல்வி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி கொடுக்கப்படும். இதன்மூலம் மதரசாக்களில் கல்வி பயிலுவோரும், பொது கல்வியில் தங்களது பங்களிப்பை அளிக்க இயலும். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.
சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தோரின் சமூக பொருளாதாரம், கல்வி அதிகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பெறுவது உறுதி செய்யப்படும்.
இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். இந்த 5 கோடி பேரில் பாதி பேர், சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் ஆவர்.
கல்வி கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டத்தின்கீழ், பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பாலிடெக்னிக்குகள், பெண்கள் விடுதிகள், குருகுல மாதிரி உறைவிட பள்ளிகள், பொது சேவை மையங்கள் ஆகியவை போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்டு வருகின்றன.
கல்வியை ஊக்குவிக்கும் வகையில், குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com