தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. கடலோரப் பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மாநிலம் முழுவதும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தின் பிறவம் பகுதியில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதையடுத்து, ஆலப்புழை, சேர்தாலா, நெடுமங்காடு ஆகிய பகுதிகளில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வரும் 16-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல இடங்களில் 7-11 செ.மீ அளவில் மழை பொழிய வாய்ப்புண்டு என்று கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை..: லட்சத்தீவு, கேரளம் மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 பேர் பலி..: மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், மழை நீர் தேங்கிய இடத்தில் ஏற்பட்ட மின்கசிவில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். கொச்சியில் மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். கடலோரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பல மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன
என்றனர்.