ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் மாநகராட்சியின் துணை மேயர் ஷேக் இம்ரானின் தொழில் நிறுவனங்கள் உள்பட 10 மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
இரு நாள்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், துணை மேயர் ஷேக் இம்ரானுக்கு சொந்தமான நிறுவனங்கள் வருமான வரித் துறையினரின் சோதனைக்கு உள்ளாகியுள்ளது.
இம்ரானுக்கு சொந்தமான கேவாஹ் குழுமத்துக்கு சொந்தமாக ஸ்ரீநகரில் உள்ள 8 அலுவலகங்கள், தில்லி, பெங்களூரு அலுவலகங்களிலும் வருமான வரித் துறையின் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஜம்மு-காஷ்மீர் வங்கியில் நடத்திய சோதனைக்கும், இப்போது வருமான வரித் துறை நடத்திய சோதனைக்கும் தொடர்புள்ளதாகத் தெரிகிறது. அந்த வங்கியில் ஷேக் இம்ரானின் நிறுவனங்கள் ரூ.120 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாததால், அது வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதில் வங்கி அதிகாரிகளுக்கும் ஷேக் இம்ரானின் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், பல்வேறு விதிகளை மீறி ஷேக் இம்ரானின் நிறுவனத்துக்கு வங்கி பெருமளவில் கடன் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.