காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேர் பலி; 4 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து புதன்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். காவல் துறை ஆய்வாளர் உள்பட 4 பேர்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து புதன்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். காவல் துறை ஆய்வாளர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், அனந்த்நாக்கில் உள்ள கே.பி. சாலைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை குறி வைத்து  துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதைத் தொடர்ந்து கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினர். 
இதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அனந்த்நாக் காவல் நிலைய ஆய்வாளர் அர்ஷத் அகமது உள்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், யாத்ரீகர்கள் பயணிக்கும் கே.பி. சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதி சுட்டுக் கொலை..: இதனிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த பகுதியைச் சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினர். 
அதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரவு முழுவதும் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எஞ்சியோர் தப்பியோடி விட்டனர். உயிரிழந்த பயங்கரவாதி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com