புது தில்லி: தமிழகத்துக்கு காவிரியில் 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டும் கர்நாடகா திறந்து விடாத நிலையில், ஜூன் 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூடுகிறது.
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஜூன் தொடக்கத்தில் தமிழகத்துக்கு 4.5 டிஎம்சி நீர் வர வேண்டிய நிலையில், 1 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.
எனவே, காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது குறித்து விவாதிக்க தமிழக அரசின் வலியுறுத்தலைத்தொடர்ந்து ஜூன் 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூடுகிறது.
முன்னதாக கடந்த மாதம் 28ம் தேதி தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் அலுவலகத்தில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் அதன் தலைவர் எஸ். மசூத் ஹுசேன் தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஜூலை 2, டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், ஆணையத்தில் இடம் பெற்றுள்ள காவிரி நதி நீர் பயன் பெறும் மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் கோரிக்கை: தமிழகத்தின் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுவதை விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதால், தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி நீரையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி மாதம்தோறும் தமிழகத்திற்கான நீரையும் கர்நாடக அரசு விடுவிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பிப்ரவரி முதல் மே வரையில் ஒவ்வொரு மாதமும் 2.5 டிஎம்சி வீதம் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முழுமையாக அளிக்கவில்லை. இதனால், ஏற்பட்டுள்ள குறைபாடு நீரான 2 டிஎம்சியை இம்மாத இறுதிக்குள் உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆணையம் உறுதி: கூட்டத்துக்குப் பிறகு தமிழக பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குறுவை சாகுபடிக்கான நீரை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீரை எவ்விதக் குறைவுமின்றி விடுவிக்க தமிழகத்தின் தரப்பில் கோரப்பட்டது. ஆணையம் அந்த நீரை தருவதற்கு உறுதியளித்துள்ளது என்றார்.
கர்நாடக அரசின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் அந்தமாநில அணைகளில் உள்ள நீரின் அளவு, காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் விவரங்கள் குறித்தும், பருவமழைச் சூழல், நீரியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினர்.
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீர்: இக்கூட்டத்திற்குப் பிறகு ஆணையத்தின் தலைவர் எஸ். மசூத் ஹுசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆணையக் கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. கூட்டத்தில், முக்கியமாக பிலிகுண்டுவில் இருந்து தமிழகத்துக்கு விடுவிக்கப்படும் காவிரி நீர் தொடர்பான விவாதிக்கப்பட்டது. ஜூன் மாதத்துக்கு வரையறுக்கப்பட்ட ஒதுக்கீடான 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு பிலிகுண்டுவில் இருந்து விடுவிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், வரையறுக்கப்பட்ட அளவின்படி தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு ஜூனில் விடுவிக்கப்பட வேண்டிய நீரை ஏற்கெனவே உள்ளது போல வழங்குவது தொடர வேண்டும் எனவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசு 9.19 டிஎம்சி நீரை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கும். வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, பருவமழை வழக்கமாக இருக்கும் என நம்புகிறோம். இதன் நிலைமை குறித்து அடுத்த கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படும். இது தொடர்பாக கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக தரப்பும் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளது என்றார் அவர்.