விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் ஏஎன் 32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
கருப்புப் பெட்டியை ஆய்வு செய்தால்தான் விபத்துக்கான காரணம் கண்டறியப்படும்.
நேற்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மீட்புக் குழுவினர், விமானத்தில் சென்ற 13 பேரும் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து, ஏஎன்-32 ரக விமானத்தில் சென்ற 13 பேரில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என்று அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் பயணம் செய்தவர்களில் யாராவது உயிர்பிழைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக, சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவின் விரைந்து சென்றனர்.
ஆனால், விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை மீட்புக் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 விமானம், அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹாட்டில் இருந்து அருணாசலப் பிரதேசத்தில் சீன எல்லையோரம் உள்ள ஷியோமி மாவட்டத்துக்கு கடந்த 3-ஆம் தேதி மதியம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் விமானப் படையைச் சேர்ந்த 13 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட அரை மணி நேரத்தில், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மென்சுகா என்ற கிராமம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு, மாயமான அந்த விமானத்தை மாநிலம் முழுவதும் விமானப் படையினர் தேடி வந்தனர்.
விமானம் மாயமான இடம், மலைகள் அதிகமுள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதால் விமானத்தைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், லிபோ என்ற இடத்துக்கு வடக்கில் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் மாயமான ஏ.என்.-32 விமானத்தின் உதிரி பாகங்களை, விமானப் படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டறிந்தது.