கர்நாடகத்தில் ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சரவையை விரிவுபடுத்தி முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத இடையிலான கூட்டணி அரசில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்று பாஜக தலைவர் எடியூரப்பா விமர்சித்துள்ளார்.
மேலும் கர்நாடக அரசு மீது அதிருப்தி உள்ளதாகவும, எனவே இந்த ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் இரண்டு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களான ஆர்.சங்கர் மற்றும் ஹெச்.நாகேஷ் ஆகிய இருவருக்கும் அம்மாநில முதல்வர் குமாரசாமி அமைச்சரவைப் பதவி வழங்கியுள்ளார். இவர்கள் இருவரும் ஆளுநர் வாஜுபாய் வாலா முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர்.
இவர்களில் ஆர்.சங்கர் ஏற்கனவே கர்நாடக அமைச்சராக இருந்து பின்னர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.