மர்ம காய்ச்சல் காரணமாக பிகாரில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 54-ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.
பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் மர்ம காய்ச்சல் காரணமாக 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கேஜரிவால் மருத்துவமனையில் தற்போது இந்த மர்ம காய்ச்சல் காரமணாக 172 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த 3 வாரங்களில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 மற்றும் கேஜரிவால் மருத்துவமனையில் 8 என உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 54-ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.
உள்ளூரில் இதனை சம்கி காய்ச்சல் என அழைக்கின்றனர். மருத்துவர்கள் இதனை அக்யூட் என்சிஃபாலிடிஸ் சிண்ட்ரோம் (ஏஈஎஸ்) என்று தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு திடீரென ஏற்படும் காய்ச்சல் மற்றும் உடலின் சத்துக்குறைபாடு காரணமாக இந்த நோய் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இருந்தாலும் நோய் பாதிப்பின் உண்மைத்தன்மை இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.