அயோத்தியில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தி ராமர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். முன்னதாக உத்தரப் பிரதேச துணை முதல்வர்கள் தினேஷ் ஷர்மா வெள்ளிக்கிழமையும், கேஷவ் மௌரியா சனிக்கிழமையும் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ராமஜென்மபூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால் தாஸின் 81-ஆவது பிறந்ததின விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை அயோத்தியில் கொண்டாட விஷ்வஹிந்து பரிட்சத் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் பேருந்து, ரயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த லஷ்கர்-ஈ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
நேபாளத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்று அங்குள்ள அம்பேத்கர் நகர், ஃபைஸாபாத் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களிலும் தாக்குதல் நடத்த சதித்திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை ஈடுபடுத்தும் பணியில் முகமது உமர் மத்னி என்பவர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனிடையே 2005 அயோத்தி பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான தீர்ப்பு ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஜூன் 2005-ல் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக சர்வதேச பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் பயங்கரவாதிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.