தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு தில்லி வந்தடைந்தார்.
விமான நிலையத்திலிருந்து பொதிகை தமிழ்நாடு இல்லம் வந்தடைந்த முதல்வரை தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் (தமிழ்நாடு இல்லம்) ஆஷிஷ் வச்சானி வரவேற்றார்.
பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நீதி ஆயோக் கூட்டம் தில்லியில் நடைபெறுகிறது. சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும், தலைமைச் செயலாளர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
சுமார் 6 மணி நேரம் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின்போது, பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.