பிகார் மாநிலத்தில் அனல் காற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிகார் மாநிலத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான அனல் காற்று வீசியது. இதனால், 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்த வெப்பம் தாங்க முடியாமல் அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணி நிலவரப்படி அம்மாநிலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 78 ஆக அதிகரித்துள்ளது.
ஔரங்கபாத் மாநிலத்தில் 33 பேரும், கயை மாநிலத்தில் 31 பேரும், நவாடா மாநிலத்தில் 12 பேரும் மற்றும் ஜமுய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இது அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலாகும்.
அதிகாரப்பூர்வமற்ற தகவலாக, அனல் காற்று காரணமாக சுமார் 150 வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கயை, ஔரங்கபாத் மற்றும் நவாடாவில் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் சுமார் 150 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதன்மை சுகாதார மையங்களில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் பாதிக்கப்பட்ட ஔரங்கபாத் மற்றும் கயை மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரத் துறை மருத்துவர்கள் குழுவை அனுப்பியுள்ளது. பிகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதேசமயம் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மாநில சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கடுமையான அனல் காற்று மற்றும் வெப்பம் காரணமாக, பிகாரில் ஜூன் 22 வரை பள்ளிகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பும் இன்று வெளியானது.