இந்த ஆண்டுக்கான "மிஸ் இந்தியா' அழகி பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் சுமன் ராவ் வென்றுள்ளார்.
மும்பையிலுள்ள சர்தார் வல்லபபாய் படேல் உள்விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சுமன் ராவுக்கு, கடந்த ஆண்டில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அனு கீர்த்தி வாஸ் மகுடம் சூட்டினார்.
சி.ஏ. மாணவியான சுமன் ராவ், தாய்லாந்தில் வரும் டிசம்பரில் நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றது தொடர்பாக அவர் கூறுகையில், "இலக்குகளை எட்டுவதற்காக துணிச்சலுடன் செயல்படும் என்னைப் போன்ற இளம்பெண்களுக்கு நம்பிக்கை ஒளியாக நான் மாறியிருக்கிறேன். இதை கௌரவமாக கருதுகிறேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை' என்றார்.
இந்த ஆண்டுக்கான இந்திய அழகி போட்டியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த இளம்பெண் ஷிவானி ஜாதவ் இரண்டாமிடமும் (மிஸ் கிராண்ட் இந்தியா-2019), பிகாரைச் சேர்ந்த ஷ்ரேயா சங்கர் என்ற இளம்பெண் மூன்றாமிடமும் (மிஸ் இந்தியா யுனைடெட் கான்டினென்ட்ஸ்-2019) பிடித்தனர். இவர்களில், ஷிவானி ஜாதவ் பொறியியல் படிப்பு முடித்தவர். ஷ்ரேயா சங்கர், மேலாண்மை படிப்பு மாணவி.
இறுதிப் போட்டியில், பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் ஃபல்குனி- ஷானே பீக்காக், கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வனேசா டி லியோன், பாலிவுட் நடிகைகள் ஹூமா குரேஷி, சித்ரங்கதா சிங், ஒளிப்பதிவாளர் ரெமோ டி-சௌஸா உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், மௌனி ராய் உள்ளிட்டோரின் நடனம் இடம்பெற்றது. நிகழ்ச்சியை, கடந்த 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மானுஷி சில்லருடன் இணைந்து பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான மணீஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.