புது தில்லி: மத்திய அரசின் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டம் என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இது குறித்து ஆலோசிப்பதற்காக புதனன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி தில்லியில் கூட்டினார். ஆனால் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் மத்திய அரசின் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டம் என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்திற்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் என்பது அரசியமைப்புச்சட்டம் மத்திய அரசுக்கு வழங்கி உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தையே சேதப்படுத்துவதாகும்.
இந்த திட்டமானது கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையின் வேரினை பாதிக்கும் என்ற உண்மையின் அடிப்படையில்தான் இதற்கு எங்களின் எதிர்ப்பு இருக்கிறது.
நிதிஆயோக் அமைப்பின் ஆலோசனைப்படி தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்தால் அதை முழுமையாக எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.