மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு கோரிய மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு கோரிய மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்


நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கடந்த 10-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி பயிற்சி மருத்துவர் உள்பட 2 பேரை நோயாளியின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கினர். இதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொருவர் லேசான காயங்களுடன் தப்பினார். 
அதையடுத்து, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, அந்த மாநிலத்தில் இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்ததால் போராட்டம் வலுத்தது. 
அதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். அதையேற்ற நீதிபதிகள், இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை மருத்துவர்கள் திங்கள்கிழமை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொண்டோம். இப்போது மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 
பிரச்னையின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை. மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் எதிராகவும் இல்லை. எனினும், பொதுமக்களின் நேரத்தை வீணடித்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது குறித்து முழுமையாக ஆராய வேண்டியுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்க இயலாது. இந்த மனு, சம்பந்தப்பட்ட அமர்வுக்கு விசாரணைக்கு அனுப்பப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மருத்துவர்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாடு முழுவதும் 75 சதவீத மருத்துவர்கள், ஏதோ ஒரு வகையில் தாக்குதலை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவர்கள் சங்க ஆய்வறிக்கை கூறுகிறது. பெரும்பாலும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே இத்தகைய வன்முறைகள் நிகழ்கின்றன. மருத்துவர்கள் நம் அனைவரது உயிரையும் காப்பவர்கள். 
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தேசத்துக்கு சிறந்த சேவையை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com