பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு குறைவு (ஹைபோகிளைசீமியா) காரணமாக பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பிகார் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த 1-ஆம் தேதி முதல் பிகாரின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 600 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றர். இவர்களில் 136 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முதலில், குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறி காணப்பட்டதால், அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து குழந்தைகள் இறந்து கொண்டிருந்தனர். பின்னர்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக அவர்கள் இறந்தது தெரிய வந்தது.
உயிரிழந்த அனைவரும் 10 வயதுக்குள்பட்டவர்கள். கடந்த ஆண்டில் இந்த நோய்க்கு 4 குழந்தைகள்தான் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 16 மாவட்டங்களில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முசாஃபர்பூர் மருத்துவமனையில் தான் அதிகபட்ச உயிரிப்புகள் நேரிட்டுள்ளன. இங்கு மட்டும் 117 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
முதல்வர் உத்தரவு..: இந்த நோய் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், குழந்தைகளை பசியுடன் தூங்க வைக்க வேண்டாம் என்று பெற்றோர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நார்வே மருத்துவர்கள் குழு ஆய்வு..: குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு நார்வே நாட்டிலிருந்து நிபுணர்கள் குழு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மத்திய அரசின் சிறப்பு மருத்துவர்கள் குழு பார்வையிட்டது.