மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்குப் பதிலாக, நாடு முழுவதும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும் அக்கட்சியினர் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து இயந்திர வாக்குப்பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். மின்னனு வாக்குப் பதிவு முறையை மேற்கொள்ள கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர்.
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விரிவாக ஆராய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.