ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, பாஜக மேற்கொண்ட சரியான நடவடிக்கைகளின் காரணமாகவே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் செளகான் தெரிவித்தார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், பல கட்சிகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
பரம்பரையாக ஆட்சிப் புரிந்து வந்தவர்களுக்கும், ஜாதி அரசியல் புரிபவர்களுக்கும் இந்தத் தேர்தல் சரியான பாடத்தை கற்பித்துத் தந்துள்ளது. மக்கள் இம்முறை ஜாதிகளை ஆதரிக்காமல், வளர்ச்சியையும், நலத்திட்டங்கள் மற்றும் தேசியவாதத்தின் அடிப்படையிலும் வாக்களித்தனர். இந்தத் தேர்தல் இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை விட, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50 சதவீத வாக்குகள் கிடைத்தன. உண்மையை கூற வேண்டுமானால், சட்டப்பேரவைத் தோல்விக்குப்பிறகு மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கைகளின் காரணமாகவே பாஜகவுக்கு இந்த வெற்றி சாத்தியமாயிற்று.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் தவறான கருத்துக்களை பரப்பியதன் காரணமாகவே 3 மாநிலங்களிலும் வெற்றி பெற முடிந்தது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும் என்று ஒருபோதும் நான் விரும்பியதில்லை. அதனை நான் அனுமதிக்கவும் மாட்டேன். தற்போது சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடனேயே காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.
நாங்கள் நினைத்திருந்தால், பாஜகவின் ஆட்சியை மாநிலத்தில் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நான் கருதினேன். அதனால், அக்கட்சியே ஆட்சியமைக்க தார்மீக உரிமை உண்டு என்று கருதினோம் என்று தெரிவித்தார்.