ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஹனுமான் என்று கோஷம் எழுப்பக்கோரி முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில், 22 வயது முஸ்லிம் இளைஞரை திருடியதாக குற்றம்சாட்டி ஒரு கும்பல் கடுமையாக தாக்கினர். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஹனுமான் என்று கோஷம் எழுப்புமாறு பல மணி நேரம் அவரை தாக்கினர்.
இதையடுத்து, காயம் காரணமாக ஜூன் 22-ஆம் தேதி அந்த இளைஞர் உள்ளூர் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பழைய இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகள் ஏதும் இல்லை, வெறும் அன்பும் அரவணைப்பும் தான் இருந்தது. வெறுப்புணர்வு நிறைந்த இந்த புதிய இந்தியாவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜார்கண்ட் மாநிலம் கும்பல் கொலைகளின் ஆலையாக மாறியுள்ளது என்று மாநிலங்களவையில் பேசினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இந்த சம்பவம் தொடர்பாக மௌனம் கலைத்துள்ளார். மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி இதுகுறித்து கூறியதாவது,
"ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கும்பல் கொலை வேதனையளிக்கிறது. இதற்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
ஆனால், மாநிலங்களவையில் ஒரு சிலர் ஜார்கண்ட் மாநிலம் கும்பல் கொலையின் ஆலை என்று கூறுகின்றனர். இது சரியா? அவர்கள் ஏன் ஒரு மாநிலத்தை இழிவுபடுத்துகிறார்கள்? ஜார்கண்ட் மாநிலத்தை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை கிடையாது" என்றார்.