நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கே. கிஷண் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆதரவாளர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் 155 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையதளத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகவலைதள பக்கங்களை தனது சித்தாந்தத்தை பரப்புவதற்கு ஐ.எஸ். அமைப்பு பயன்படுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அந்த இணையதளப் பக்கங்களை விசாரணை அமைப்புகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. அதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடல்வழி ஊடுருவல் அச்சுறுத்தலை கவனத்திக் கொண்டு, கடலோரப் பகுதியில் கண்காணிப்பையும், ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தும்படி கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
700 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 700க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதாவது கடந்த 2016ஆம் ஆண்டில் 150 பேரும், 2017ஆம் ஆண்டில் 213 பேரும், 2018ஆம் ஆண்டில் 257 பேரும், நிகழாண்டில் ஜனவரி 16ஆம் தேதி வரை 113 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சண்டையின்போது அப்பாவி மக்கள் 112 பேரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியாகி விட்டனர். பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதும் சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதேபோல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்போரை கண்காணித்து, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முகநூல் சமூகவலைதளத்தில் பெண்கள் சிலருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர்களது புகைப்படங்கள், செல்லிடப் பேசி எண்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், 2018ஆம் ஆண்டில் 18 வழக்குகளும், நிகழாண்டில் இதுவரை 2 வழக்குகளையும் தில்லி போலீஸார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2009-13ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில், இடதுசாரி தீவிரவாத வன்முறைச் சம்பவங்கள் சுமார் 43 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
இடதுசாரி தீவிரவாத வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 60.4 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்தப் பதிலில் கே. கிஷண் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.