எதிரிகளின் முகாம்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும் என்பதை உணர்த்தவே வான்வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது; அங்குள்ள மனிதர்களைக் கொல்வதற்காக அல்ல என்று மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா கூறினார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சரான அவர், மேற்கு வங்கம், சிலிகுரியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தானின் பாலாகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த வாரம் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் நடந்த பிறகு, பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. இதேபோல், அரசு செய்தித் தொடர்பாளரோ அல்லது கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவோ, உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்த விவரத்தை வெளியிடவில்லை.
அதே நேரத்தில் அந்த தாக்குதலில் 300-350 பயங்கரவாதிகள் உயிரிழந்தாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த தாக்குதல் குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த விவரமும் வெளியிடப்படாத நிலையில், ஊடக செய்திகளை எப்படி நான் ஆதரிக்க முடியும்?
இந்தத் தாக்குதலின் முதன்மையான நோக்கமே, தேவைப்பட்டால், பாகிஸ்தானின் புறவாசலுக்குள் ஊடுருவி எதிரிகளின் முகாம்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்பதை உணர்த்துவதற்காகத்தான்; மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல என்றார் எஸ்.எஸ்.அலுவாலியா.