கடந்த 2014-ஆம் ஆண்டு கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.8 சதவீதமாக இருந்தது. இப்போது, 4.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
நவி மும்பை டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது:
கல்வித் துறையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கல்வித் தரமேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது என பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7 புதிய ஐஐடி மற்றும் ஐஐஎம்கள், இரு புதிய தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள், 3 மத்திய பல்கலைக்கழகங்கள், 125 கேந்திர வித்யாலய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்வயம் இணையதளம் மூலம் 2,000 படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்த இணையதளம் மூலம் எந்தநேரத்திலும் கற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜிடிபி-யில் 3.8 சதவீதம் அளவுக்கே கல்விக்காக செலவிட்டன.
இப்போது இது 4.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதனை 6 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கல்வி நிலையங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இது மத்திய பாஜக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இதுபோன்ற நடவடிக்கைகளால் புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுவதை கல்வித் துறை உறுதி செய்துள்ளது என்றார் ஜாவடேகர்.