கோவை: இன்று மகா சிவராத்திரி விழா இந்தியாவில் உள்ள சிவாலயங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல சிவாலயங்களில் ஏராளமான சிவ பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், லட்சக்கணக்கானோர் கூடும் கோவை ஈஷா யோகா மையத்துக்கு போலாம்பட்டி வனத்துறை எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், வன உயிரினங்களால் ஈஷா யோகா மையத்தில் இருக்கும் பக்தர்களுக்கோ, உடைமைகளுக்கோ சேதம் ஏற்பட்டால் அதற்கு வனத்துறை பொறுப்பாகாது. எந்த இழப்பீடும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் ஈஷா மையத்தில் இன்று மாலை தொடங்கி நாளை காலை வரை மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இதையடுத்து ஈஷா மையத்துக்கு 10 நிபந்தனைகளை வனத்துறை விதித்துள்ளது.
அதில், வனத்துக்குள் அல்லது வனத்தையொட்டிய பகுதியில் வன உயிரினங்களால் பக்தர்களுக்கோ, உடைமைகளுக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு வனத்துறை பொறுப்பாகாது.
யானைகள் உணவு மற்றும் குடிநீருக்காக வேறு பகுதிக்கு செல்லும் என்பதால், ஈஷா மையத்தில் பெரிய மேடை அமைத்து அதில் 4 பேரை பணிக்கு அமர்த்தி யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
சிவராத்திரி விழாவின் போது பட்டாசு அல்லது வான வேடிக்கை போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதிக ஒளியை உமிழும் விளக்குகள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டாம்.
சிவராத்திரியின் போது வனத்தில் நெருப்புப் பரவும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.