கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமரிசித்து பேசினார்.
கோழிகோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். வெள்ளம் வந்த போது எங்கே சென்றீர்கள்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு என்ன செய்தீர்கள்? வன்முறையில் ஈடுபடுவதற்கு மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சிக்கு தெரியும். வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்று வந்துவிட்டால் மார்க்சிஸ்ட் வசம் பதில் இல்லை. அவர்களது கொள்கை செயலிழந்துவிட்டது என்பதை உணர அவர்களுக்கு இன்னும் நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன்.
பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் மார்க்சிஸ்ட் வன்முறையை கையாளுகின்றனர். வலிமையற்றவர்களின் ஆயுதம் தான் வன்முறை. வன்முறையை அஹிம்சை மூலமாகவே காங்கிரஸ் எப்போதும் எதிர்கொள்ளும்.
நரேந்திர மோடி அனைவரையும் விமரிசித்து மட்டுமே பேசுவார். யாரை பற்றியும் நன்றாக பேசியதே இல்லை. அவர் வாஜ்பாய் குறித்து பேசுவதை கவனியுங்கள். அத்வானியை எப்படி நடத்துகிறார் என்பதையும் பாருங்கள். அனில் அம்பானி மீது மட்டுமே அவருக்கு மரியாதை உள்ளது" என்றார்.