ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்தர உறுப்பினராவதற்கு, முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மேற்கொண்ட தவறான முடிவே காரணம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காங்கிரஸை சாடினார்.
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி பலவீனமானவர் என்றும், அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை எதிர்க்க தைரியமில்லாதவர் என்றும் கடுமையாகச் சாடினார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தனது சுட்டுரை பதிவில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் மற்றும் சீன விவகாரங்களில் உண்மையாகவே தவறிழைத்தது ஒரே நபர் (நேரு) தான். கடந்த 1955-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுக்கும், நேரு எழுதிய கடிதமே இதற்கு முக்கிய சான்று.
அந்தக் கடிதத்தில், சீனாவுக்கு ஐ.நா.வில் இடமளிக்கவும், இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடமளிக்கவும் அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. சீனா போன்ற பெரிய நாடு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறாமல், அந்த இடத்தை இந்தியா எடுத்துக் கொள்வது நியாயமற்ற செயல் என்று நேரு குறிப்பிட்டிருந்தார்.
இப்போது, உண்மையில் தவறிழைத்தது யார் என்று ராகுல் காந்தி கூறுவாரா? என்று அந்த பதிவில் ஜேட்லி கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பரிந்துரைத்துள்ள நிலையில், சீனா மட்டும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.