ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பெண் சிறப்பு போலீஸ் அதிகாரியை மர்ம நபர்கள் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொன்றது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியில் வசித்து வந்தவர் குஷ்பு ஜான். மாநில காவல்துறையில் சிறப்பு போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் 2.40 மணியளவில் வீட்டில் இருந்து குஷ்பு வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குஷ்புவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குஷ்புவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறப்பு போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மர்மநபர்களை தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.