சர்ச்சையாக பேசியே பிரபலமடைந்த பாஜக எம்.பி. சாக்ஷி மஹாராஜ், மக்களவைத் தேர்தலில் "மோடி சுனாமி' ஏற்படப் போகிறது. 2024-ஆம் ஆண்டில் தேர்தலே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அவர் பேசியதாவது:
2014-இல் இருந்த "மோடி அலை' தற்போது "மோடி சுனாமி'யாக மாறியிருக்கிறது. அவர் மீண்டும் பிரதமர் ஆவதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. முந்தைய தேர்தலைக் காட்டிலும் இந்த முறை வெற்றி வாய்ப்புகள் பலமாக இருக்கும்.
"மோடி சுனாமி' நாட்டை விழிப்படையச் செய்துள்ளது. 2024-இல் தேர்தலே இருக்காது என நினைக்கிறேன். நாட்டின் பெயரால், முழுமையான நேர்மையுடன் நாம் சந்திக்கும் ஒரே தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்.
தேர்தலுக்காக சிலர் எதை, எதையோ செய்கின்றனர். பிரியங்கா காந்தி வதேராவை அரசியலில் களம் இறக்குகிறார்கள். புதிது, புதிதாய் கூட்டணி அமைக்கிறார்கள். ஆனால், நாங்கள் மோடி என்ற தலைவரை மட்டுமே முன்னிறுத்துகிறோம்.
இந்தத் தேர்தலில் போட்டி என்பது எந்தவொரு கட்சியின் பெயரிலும், சாக்ஷி மஹாராஜ் பெயரிலும் இருக்கப் போவதில்லை. மாறாக, தேசத்தின் பெயரால் போட்டி நடக்கப் போகிறது என்றார் அவர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியலில் களமிறக்கப்பட்ட பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மண்டல மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மாநில அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அதை விமர்சிக்கும் வகையில் சாக்ஷி மஹாராஜின் பேச்சு அமைந்திருந்தது.