ஒடிஸா பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவரின் மருமகன் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா பாஜக தலைவர் வசந்த் பாண்டா. இவரது மருமகன் ஹரிசந்திரா பாண்டா. இவர் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் சனிக்கிழமை பிஜு ஜனதா தள கட்சியில் சேர்ந்தார்.
பட்நாயக்கின் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சியில் மாநிலத்தை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்ததாக ஹரிசந்திரா தெரிவித்துள்ளார். மேலும், வசந்த் பாண்டா ஏதேச்சை அதிகாரத்தை பின்பற்றி வருவதாகவும், பாஜக வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் அவர், மாநில வளர்ச்சியை புறக்கணித்து விட்டதாக ஹரிசந்திரா தனது மாமனார் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த இணைப்பு குறித்து முதல்வர் பட்நாயக் கூறுகையில், " பிஜு ஜனதா தளத்துக்கு ஹரிசந்திராவின் வருகை கட்சியை மேலும் வலுப்படுத்தும்' என்றார்.
ஒரு வாரத்துக்கு முன்பாக, ஒடிஸா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹேமந்தா பிஸ்வாலின் மகள் சுனிதா பிஸ்வால் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். தற்போது பாஜக தலைவரின் மருமகனும் பிஜு ஜனதா தளத்தில் ஐக்கியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒடிஸா மாநிலத்தில் உள்ள 21 மக்களவை தொகுதிகளுக்கும், 147 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.