பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் நேர்மையாக நடந்துகொண்டால், தாவூத் இப்ராஹிம், சயீது சலாவுதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டிடம் இந்தியா முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, அரசு அதிகாரிகள் சிலர் சனிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்திய ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு மீதும், மற்ற பயங்கரவாத அமைப்புகள் மீதும் பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயங்கரவாதிகள் சிலரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. ஆனால், இவை வெறும் கண்துடைப்பு என்றே தோன்றுகிறது. பாகிஸ்தானின் இதுபோன்ற நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்க எந்தவிதத்திலும் உதவாது.
பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதற்கான ஆதாரங்களைப் பலமுறை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது. அந்த ஆதாரங்களின் உறுதித்தன்மையை மற்ற நாடுகள் கூட ஆய்வு செய்யலாம். அந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், சயீது சலாவுதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி நீண்ட காலமாக பாகிஸ்தானுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில், நேர்மையுடன் நடந்து கொள்கிறோம் என்பதை பாகிஸ்தான் தெரிவிக்க விரும்பினால், இந்தியக் குடியுரிமை கொண்ட தாவூத் இப்ராஹிம், சயீது சலாவுதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அவர்கள் வலியுறுத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.