ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மனு அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
எனது உறவினரான விவேகானந்த ரெட்டி மரணத்தில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்துக்கு தொடர்பில்லை என்றால் ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயக்கம் காட்ட வேண்டும்?
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னாள் அமைச்சரான விவேகானந்த ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை இரவு தனியாக இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டார். 2009-ஆம் ஆண்டு ஆந்திர மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவேகானந்த ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.