சரணடைய முன்வந்த தாவூத் இப்ராஹிம் முடிவை அன்றைய மஹாராஷ்டிர முதல்வர் சரத் பவார் நிராகரித்தது ஏன் என்று பிரகாஷ் அம்பேத்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து வாசித் பகுஜன் அகாதி கட்சித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறியதாவது:
கடந்த 1990-ஆம் ஆண்டு மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மூலமாகவோ அல்லது தானாகவோ சரணடைய முன்வந்தார். அப்போது அன்றைய பிரதமர் மற்றும் உளவுத்துறை ஆகியோருடன் பேசி அதனை சரத் பவார் நிராகரித்தது ஏன்? அச்சமயங்களில் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் தாவூத் இப்ராஹிம்மை நோக்கி தான் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஒருவேளை தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட்டிருந்தால், பல பயங்கரவாத தாக்குதல்களில் உண்மை பின்னணி தெரிந்திருக்கும். மேலும் நாட்டில் நடைபெற்ற பல குண்டுவெடிப்புச் சம்பவங்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இதுகுறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது புல்வாமா தாக்குதல் மூலம் பாகிஸ்தான் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பது தெரிகிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.