பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 20 இடங்களிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.
தொகுதிப் பங்கீடு அறிவிப்பை ஆர்ஜேடி தேசிய செய்தித்தொடர்பாளர் மனோஜ் ஜா, அக்கட்சியின் பிகார் தலைவர் ராம் சந்திர புர்வே ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் முக்கியத் தலைவரான சரத் யாதவ், ஆர்ஜேடி கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியையும் தேர்தலுக்குப் பிறகு, ஆர்ஜேடியுடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 5 இடங்களிலும், முகேஷ் ஸஹனியின் விகாஸ் ஷீல் இன்சான் கட்சி 3 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை களமிறக்குகிறது.
பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆர்ஜேடிக்கு ஒதுக்கப் பட்ட 20 தொகுதிகளில் ஒன்று இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்எல்) கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலையும் மகா கூட்டணி வெளியிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி உடன்பாடு செய்துகொண்டதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. நிகில் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பாட்னாவில் நடைபெற்ற தொகுதி உடன்பாடு அறிவிப்பு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், உபேந்திர குஷ்வாஹா, சரத் யாதவ், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் பங்கேற்கவில்லை.