பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ராணுவம் நடவடிக்கை எடுத்ததை கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் ராகுல் காந்தியையும் நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் கூறியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் இது தொடர்பாக பியூஷ் கோயல் கூறுகையில், புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நமது விமானப் படையினர் நடத்திய தாக்குதல் விமர்சித்தும் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டியும், அரசியல் ஆலோசகருமான பிட்ரோடாவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ராகுல் காந்தி எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் ராகுல் காந்தியையும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், ராகுல் காந்தியின் அரசியல் குரு பிட்ரோடாவின் கருத்து, காங்கிரஸின் சிந்தனை ஓட்டத்தை தெளிவாக வெளிக்காட்டுகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்தியாவின் செயலுக்கு எதிராகவும் காங்கிரஸின் கருத்துகள் அமைந்துள்ளன. நமது வீரர்களின் தியாகத்தையும் சந்தேகத்துக்கு உள்ளாக்குகின்றனர் என்றார்.