மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி - பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி 37 தொகுதிகளிலும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அஸாம்கர் தொகுதியில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸாம் கான் ராம்பூரில் களமிறங்குகிறார்.
இதையடுத்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ், அஸாம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால், அகிலேஷ் தந்தையும், சமாஜவாதி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் பெயர் அதில் இடம்பெறவில்லை. முன்னதாக, தற்போதைய பாஜக அரசின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தின் போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என முலாயம் சிங் யாதவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.