சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான மறைந்த ராம் மனோகர் லோஹியாவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உள்ள ராம் மனோகர் லோஹியாவின் ஆளுயர திருவுருவப் படத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் விஜய் கோயல், வேளாண்மை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் ஹுக்கும்தேவ் நாராயண் யாதவ், மனித வளம் மேம்பாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் டாக்டர் சத்யநாராயண் ஜதியா ஆகியோர்
மலர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், மாநிலங்களவை தலைமைச் செயலர் தேஷ் தீபக் வர்மா, மக்களவை தலைமைச் செயலர் சிநேகலதா ஸ்ரீவாஸ்தவா ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மக்களவைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட டாக்டர் ராம் மனோகர் லோஹியா வாழ்க்கை வரலாறு குறித்த சிறு கையேடு வழங்கப்பட்டது. நாட்டுக்கு ராம் மனோகர் லோஹியா செய்த சிறந்த சேவையைப் போற்றும் விதமாக நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது திருவுருவப் படம் 1991, மே 31-ஆம் தேதி அப்போதைய பிரதமர் சந்திர சேகரால் திறந்து வைக்கப்பட்டது.